சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
526 - நெச்சுப் பிச்சி (திருவேங்கடம்) Songs from this thalam திருவேங்கடம் 529 - வரிசேர்ந்திடு
526 திருவேங்கடம் திருப்புகழ் ( - வாரியார் # 433 )
நெச்சுப் பிச்சி
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் தனதான
தனத்த தனத்த தனத்த தனத்தன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்
கச்சிக் கச்சுற் றறன்மேவி
நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய
நிரைதரு மருமலர் செருகிடு பரிமள
நிறையுறை மதுகர ...... நெடிதாடி
நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற்
றொப்புக் கொப்புக் குயர்வாகி
நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை
நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு
நிகழ்புழு கொழுகிய ...... குழன்மேலும்
வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட்
டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல
வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன்
மதசிலை யதுவென மகபதி தனுவென
மதிதில தமும்வதி ...... நுதன்மேலும்
மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்
பொற்பக் கத்திச் சையனாகி
மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத
மலரல திலைநிலை யெனமொழி தழியமெய்
வழிபட லொழிவனை ...... யருள்வாயே
நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத்
துட்டக் கட்டத் தசிகாண
நடத்தி விடத்தை யுடைத்த படத்தினில்
நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்
நகைமுக திருவுறை ...... மணிமார்பன்
நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத்
தைக்கைப் பற்றிப் பொருமாய
னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற
நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த
நரகரி யொருதிரு ...... மருகோனே
கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப்
பட்டுக் குட்பட் டமுதாலுங்
கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு
கனதன பரிமள முழுகுப னிருபுய
கனகதி வியமணி ...... யணிமார்பா
கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப்
பட்சிக் கக்கொட் டசுராதி
கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு
கடவட மலையுறை ...... பெருமாளே.
Easy Version:
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக் கச்சுற்று அறல் மேவி
நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய நிரைதரு மருமலர்
செருகிடு பரிமள நிறையுறை மதுகர நெடிது ஆடி
நி(ச்)சிக்கு அச்சப் பட்டுச் சிக்கற்று ஒப்புக்கு ஒப்புக்கு
உயர்வாகி நெளித்த சுளித்த விழைக்குள் அழைத்து
மை நிகரென அகருவும் உகுபுகை தொகுமிகு நிகழ் புழுகு
ஒழுகிய குழன்மேலும்
வச்ரப் பச்சைப் பொட்டு இட்ட பொட்டுக்குள் செக்கர்ப்
ப்ரபை போல வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கும்
மன்மதசிலை அதுவென மகபதி தனுவென மதி திலதமும்
வதி நுதன் மேலும்
மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப் பொன் பக்கத்து இச்சையனாகி
மனத்தின் அனைத்தும் அணைத்த துணைப் பதமலர் அலது
இலைநிலை எனமொழி தழிய மெய் வழிபடல் ஒழிவனை
அருள்வாயே
நச்சுத் துச் சொப்பிச்சுக் குட்டத்துள் தக்க அட்டத்து
அசிகாண நடத்தி
விடத்தை யுடைத்த படத்தினில் நட(ம்) நவில் கடலிடை
அடுபடை தொடுமுகில்
நகைமுக திருவுறை மணிமார்பன் நத்தத்தைச் சக்ரத்தைப்
பத்மத்தைக் கைப் பற்றிப் பொரு மாயன்
நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற நசிதரு நிசிசரர் உட
குடல் இடல் செய்த நரகரி ஒரு திரு மருகோனே
கச்சுத் தச்சுப் பொற்கட்டு இட்டுப் பட்டுக்கு உட்பட்டு அமுது
ஆலும் கருப்பி(ன்) ரசத்தும் உருச்செய்து வைச்சிடு
கனதன பரிமள முழுகு ப(ன்)னிரு புய கனக தி(வ்)விய மணி
அணிமார்பா
கைச் சத்திக்குக் கெற்சித்து ஒக்கப் பட்சிக்கக் கொட்ட
அசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு கறுவிய
சிறியவ
கடவைகள் புடைபடு கடவட மலையுறை பெருமாளே. Add (additional) Audio/Video Link
வருணிக்கின்றன).
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக் கச்சுற்று அறல் மேவி ...
தேன் பொருந்திய பிச்சி மலரின் குளிர்ச்சியை உடையதாய், கச்சிதமாக
முடியப்பட்டதாய், கரு மணலை ஒத்ததாய்,
நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய நிரைதரு மருமலர்
செருகிடு பரிமள நிறையுறை மதுகர நெடிது ஆடி ... சுருண்டு
மணமுள்ளதாய், இருளை அச்சுறுத்தும் கருமை கொண்டதாய், வாசனை
மலர்களை வரிசையாகச் செருகியதாய், நறுமணத்தில் வாழ்கின்ற
வண்டுகள் மொய்த்து மகிழ்வதாகி,
நி(ச்)சிக்கு அச்சப் பட்டுச் சிக்கற்று ஒப்புக்கு ஒப்புக்கு
உயர்வாகி நெளித்த சுளித்த விழைக்குள் அழைத்து ... இரவுக்கு
பயத்தை அளிப்பதாய், சிக்கல் இல்லாததாய், சமானம் இன்றி
அலங்காரத்தில் உயர்வு அடைந்து, வளைவும் சுருளும் உடையதாய்,
விருப்பத்தைத் தந்து அழைப்பதாய்,
மை நிகரென அகருவும் உகுபுகை தொகுமிகு நிகழ் புழுகு
ஒழுகிய குழன்மேலும் ... அஞ்சனத்துக்கு ஒப்பு என்னும்படியாகி,
அகில் தருகின்ற புகையின் தொகுதி மிகுந்து விளங்கும் புனுகு
கமழ்கின்ற கூந்தலின் மேலும்,
வச்ரப் பச்சைப் பொட்டு இட்ட பொட்டுக்குள் செக்கர்ப்
ப்ரபை போல வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கும் ...
வஜ்ரம் போல ஒளி தரும் பச்சைப் பொட்டை (நெற்றியில்) இட்டு, அந்தப்
பொட்டுக்குள் சிவந்த பிரபை போல வளைந்த செழிப்புள்ள பிறைக்கு
ஒப்பாக உறைவதாகி,
மன்மதசிலை அதுவென மகபதி தனுவென மதி திலதமும்
வதி நுதன் மேலும் ... மன்மதனின் வில் என்னும்படி இந்திரன் ஏவிய
வான வில் என்னும்படி (வளைவாய் விளங்க வைத்த) பிறை போன்ற
குறி அமைந்துள்ள நெற்றியின் மேலும்,
மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப் பொன் பக்கத்து இச்சையனாகி ...
(உடலில் உள்ள) மச்சங்களின் மீதும், சிவந்த விசித்திரமான அதிசயிக்கத்
தக்க அழகிய உடல் பக்கங்களிலும் இச்சை கொண்டவனாய்
மனத்தின் அனைத்தும் அணைத்த துணைப் பதமலர் அலது
இலைநிலை எனமொழி தழிய மெய் வழிபடல் ஒழிவனை
அருள்வாயே ... மனத்தில் நினைத்தவை எல்லாவற்றையும் அறிந்து
உதவவல்ல உற்ற துணையான பாத மலர் அல்லாமல் நிலையான பொருள்
வேறு இல்லை என்னும் சாஸ்திரம் தழுவிய உண்மையான வழிபாடு
செய்யாத எனக்கு அருள் புரிவாயாக.
நச்சுத் துச் சொப்பிச்சுக் குட்டத்துள் தக்க அட்டத்து
அசிகாண நடத்தி ... விஷத்தை உண்ட (பீமன், அந்த விஷம்
தாக்காமல்) சோபித்து விளங்கவும், நீர் நிலையுள் தங்கும்படி குறுக்கே
வைத்திருந்த வாள் முனைகள் இருக்கும் இடத்தைத் தெரியும்படி (அந்த
பீமனுக்குக்) காட்டியும்
விடத்தை யுடைத்த படத்தினில் நட(ம்) நவில் கடலிடை
அடுபடை தொடுமுகில் ... விஷம் உடையும்படி (காளிங்கன் என்னும்
பாம்பின்) பணாமுடியின் மீது நின்று நர்த்தனம் செய்தும், கடல் மீது
கொல்லத் தக்க தமது பாணத்தை (ராமனாகச்) செலுத்தியும் (ஆடல்
புரிந்த) மேக நிறத்துத் திருமால்,
நகைமுக திருவுறை மணிமார்பன் நத்தத்தைச் சக்ரத்தைப்
பத்மத்தைக் கைப் பற்றிப் பொரு மாயன் ... சிரித்த முகத்தை
உடைய லக்ஷ்மி உறையும் அழகிய மார்பை உடையவன், சங்கையும்
சக்கரத்தையும் தாமரை போன்ற கையில் பற்றி சண்டை செய்யும்
மாயவனாகிய திருமால்,
நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற நசிதரு நிசிசரர் உட
குடல் இடல் செய்த நரகரி ஒரு திரு மருகோனே ... நரிக்கும்,
வாளுக்கும், நெருப்புக்கும் விருப்பம் உண்டாகும்படி, அழிந்து போகின்ற
அசுரர்களின் குடலை இடுதலைச் செய்தவனும், நரகாசுரனுக்குப்
பகைவனுமான திருமாலுக்கும் ஒப்பற்ற திருமகளுக்கும் மருகனே,
கச்சுத் தச்சுப் பொற்கட்டு இட்டுப் பட்டுக்கு உட்பட்டு அமுது
ஆலும் கருப்பி(ன்) ரசத்தும் உருச்செய்து வைச்சிடு ... கச்சைக்
கட்டி அழகாக முடி போட்டு பட்டுத் துணிக்குள் அமைந்ததாய் உள்ள,
அமுதக் குடம் பொதிந்து அசைவதாய், கரும்பின் ரசத்தையே உருச்
செய்து வைத்திட்டதாய் உள்ள (வள்ளியின்)
கனதன பரிமள முழுகு ப(ன்)னிரு புய கனக தி(வ்)விய மணி
அணிமார்பா ... பருத்த மார்பகங்களின் நறு மணத்தில் முழுகும்
பன்னிரு தோள்களை உடையவனே, பொன்னாலாய மேன்மையான
ரத்தினங்களை அணிந்த மார்பனே,
கைச் சத்திக்குக் கெற்சித்து ஒக்கப் பட்சிக்கக் கொட்ட
அசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு கறுவிய
சிறியவ ... கையில் விளங்கும் வேல் ஆரவாரம் செய்து நன்றாக
உண்ணும்படி, வாத்திய முழக்குடன் வந்த அசுரர் தலைவனாகிய
சூரனை கரு நிறம் உடைய அரக்கர்கள் கூட்டத்துடன் கோபித்து
அழித்த இளையவனே,
கடவைகள் புடைபடு கடவட மலையுறை பெருமாளே. ...
வழிகளின் பக்கங்களில் உள்ள காடுகள் சூழும் திருவேங்கட மலையில்
உறையும் பெருமாளே.
1
Similar songs:
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் தனதான
தனத்த தனத்த தனத்த தனத்தன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song